வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக நினைவு நிகழ்வு
நாட்டின் பழைமை வாய்ந்த அரச திணைக்களங்களில் ஒன்றாக விளங்கும் இலங்கை சிறைச்சாலைகள்திணைக்களத்தின் அபிமானமிகு 116 ஆவது சிறைச்சாலைகள் தினம் தொடர்பானஅனுஷ்டான நிகழ்வுகள் அண்மையில் இடம்பெற்றன.
இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் 1905 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பதினாறாம் திகதி சுயாதீன திணைக்களமொன்றாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த 116 வது வருட நிகழ்வின் ஓரங்கமாக கடமையின் போது உயிர்நீத்த சிறைச்சாலை அதிகாரிகளின் நினைவாக வெலிக்கட சிறைச்சாலை வளவில் அமைந்துள்ள ஞாபகார்த்த தூபிக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, சிறைக் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஓய்வு நிலை மேஜர் ஜெனரல் வீ.ஆர்.சில்வா தலைமையில் நடைபெற்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரொனா தொற்று அச்சுறுத்தலின் நிமித்தம் இந்த நிகழ்வு சுகாதார வழிகாட்டலுக்கு உட்பட்டதாக மட்டுப்படுத்தப்பட்ட பிரமுகர்களின் பங்களிப்புடன் நடத்தப்பட்டுள்ளது. இதனால் கடமையின் போது உயிர்த் தியாகம் செய்த அதிகாரிகளின் குடும்பத்தவர்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் சிறைச்சாலைகள் தினம் தொடர்பிலான விஷேட செய்தி சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவினால் வாசிக்கப்பட்டது.
மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ரீ.ஐ.உடுவர, சிறைச்சாலை ஆணையாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். பிரித்தானிய காலனித்துவ காலப் பகுதியில் இலங்கையில் கடமையில் இருந்த கெமரன் என்ற ஆளுநரால் அறிமுகம் செய்யப்பட்ட நீதி மறுசீரமைப்புகளின் பயனாக சிறைச்சாலைச் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் 1844 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க சட்ட மற்றும் நீதிக் கட்டளைச் சட்டத்திற்கமைய பிரித்தானிய பொஸ்டல் முறைக்கு நேரொத்ததாக வெலிக்கடை சிறைச்சாலை கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
இச்சேவை 1877 ஆண்டின் 16 ஆம் இலக்க சிறைச்சாலை சட்டத்திற்கமைவாக 1905 ஆம் ஆண்டு யூலை மாதம் 16 ஆம் திகதி முதல் சிறைச்சாலைகள் ஆணையாளரின் கீழ் நிருவகிக்கப்படுகின்ற தனியானதொரு திணைக்களமாக ஒழுங்குவிதி முறைப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் 2019 ஆம் ஆண்டு வருடாந்த செயலாற்றுகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமுதாய விரிவாக்கத்தின் நிமித்தம் திணைக்களத்தின் தேவை மேலும் அதிகரித்ததன் காரணமாக, 1875 இல் இங்கிலாந்து பீன்பீல்ட் சிறைச்சாலை முறைக்கு ஒத்ததாக கண்டி போகம்பரை சிறைச்சாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விரிவடைந்த நாட்டின் சிறைச்சாலை முறைமை தற்கால சமூக சிக்கல்களுக்குள் மிக முக்கியத்துவமும் அத்தியாவசியமானதுமான நிறுவனமொன்றாக மாறியுள்ளது. நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு சிறைச்சாலைகள், விளக்கமறியல் சிறைச்சாலைகள், இளம் தவறாளிகளுக்கான சீர்திருத்த நிலையங்கள், வேலை முகா ம்௧ள், திறந்த வேலை முகாம்கள், சிறைக் கூட ங்கள் மற்றும் சிறைச்சாலைப் பாடசாலையொன்றும் திணைக்களத்தால் நிருவகிக்கபடுவதாகவும் திணைக்களத்தின் வாருடாந்த செயலாற்றுகை அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.
எம்.எஸ்.எம்.முன்தஸிர்...?
(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)
Add new comment