பெலரஸ் அரசின் மூத்த அதிகாரிகள் மீது புதிய பொருளாதார தடைகள் விதிப்பு

விமானம் வழிமறிப்பு விவகாரத்தில், பெலரஸ் அரசின் மூத்த அதிகாரிகள் மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதி பதவியில் கடந்த 27 ஆண்டுகளாக அலெக்சாண்டர் லுகாசெங்கோ இருந்து வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்தலில் அவர் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக சர்ச்சை எழுந்தது.

இதனிடையே பெலரஸ் நாட்டை சேர்ந்த ரோமன் புரோடாசெவிச் என்ற பத்திரிகையாளர், ஜனாதிபதியை விமர்சனம் செய்து வந்தார். ஜனாதிபதியின் அத்துமீறல் அதிகரித்ததால், புரோடாசெவிச், லிதுவேனியா நாட்டில் தஞ்சம் அடைந்தார். அங்கிருந்தபடி, அதிபர் தேர்தலில் உண்மையிலேயே வெற்றி பெற்றதாக கருதப்படும் எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவாக எழுதி வந்தார்.

இந்த சூழலில் கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் நகரில், எதிர்க்கட்சி தலைவருடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் ரோமன் புரோடாசெவிச் பங்கேற்றார். பின்னர், அவர் லிதுவேனியா தலைநகர் வில்னியசுக்கு திரும்புவதற்காக ரியான்ஏர் நிறுவன விமானத்தில் புறப்பட்டார். அந்த விமானத்தில் அவருடன் 171 பயணிகள் இருந்தனர்.

விமானம், பெலரஸ் நாட்டு வான் மண்டலம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென பெலரஸ் விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு ஒரு அழைப்பு வந்தது. விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், எனவே, பெலரஸ் தலைநகர் மின்ஸ்க் விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரை இறக்குமாறும் அதில் பேசிய அதிகாரி கூறினார்.

அதே சமயத்தில், பெலரஸ் நாட்டு போர் விமானம் ஒன்று, அந்த பயணிகள் விமானத்தை வழிமறித்து அரவணைத்து கூட்டி சென்றது. இதனால், வேறு வழியின்றி மின்ஸ்க் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அதில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டனர். பத்திரிகையாளர் ரோமன் புரோடாசெவிச்சை பெலரஸ் பொலிஸார் கைது செய்தனர். அவருடன் வந்த பெண்ணும் கைது செய்யப்பட்டார். அப்போது, தனக்கு மரண தண்டனை விதித்து விடுவார்கள் என்று புரோடாசெவிச் கூச்சலிட்டார்.

ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாசெங்கோ நேரடி உத்தரவின்பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பெலரஸ் அரசாங்க ஊடகம் தெரிவித்தது. இதற்கிடையே, இந்த செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், பெலரஸ் அதிபருக்கு எதிராக பேசி வந்த பத்திரிகையாளரை கைது செய்வதற்காக பயணிகள் விமானத்தை போர் விமானத்தால் வழிமறித்து தரை இறக்கிய விவகாரத்தில் பெலரஸ் அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் மீது அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், கனடா ஆகிய நாடுகள் புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.


Add new comment

Or log in with...