பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில், பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய, பாதாள உலக குற்றக் கும்பலின் தலைவரான உரு ஜுவா என அழைக்கப்படும் தினெத் மெலேன் மபுலா (27) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேகநபர் , நேற்று முன்தினம் இரவு கொல்லப்பட்டார். பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகநபர், டெடிகமுவவில் கைவிடப்பட்ட வீட்டில் பொலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக நவகமுவ பொலிசார் தெரிவித்தனர். இந்நிலையில் பாதாள உலகத் தலைவரின் மரணம் குறித்து கேள்விப்பட்டதும் நவகமுவ, டெடிகமுவ மற்றும் வதுரமுல்ல பகுதிகளில் வசிப்பவர்கள் பட்டாசுகளை கொளுத்தி, ஆரவாரம் செய்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 10ஆம் திகதி சந்தேக நபர் பியகம பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். அவரிடமிருந்து ரி -56 இயந்திர துப்பாக்கி தோட்டாக்களை பாவிக்கக்கூடிய திறன் கொண்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர், 5 கூர்மையான ஆயுதங்கள், ஒன்பது எம். எம். தோட்டாக்கள் 6, ரி -56 தோட்டாக்கள் 38 மற்றும் 6 கைக்குண்டுகளையும் பொலிசார் பறிமுதல் செய்தனர்.
மேலதிக விசாரணையின்போது, டெடிகமுவவில் உள்ள ஒரு வீட்டில் பல கைக்குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாகவும், அவற்றை மீட்க அழைத்து செல்லப்பட்டபோது , சந்தேகநபர் தப்பியோட முயன்றதால் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து நவகமுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
Add new comment