துறைமுக அதிகார சபை சட்டம்; நிறைவேற்றுவது தொடர்பில் உச்சநீதிமன்றே முடிவு செய்யும்

- அமைச்சர் கெ​ஹெலிய தெரிவிப்பு

துறைமுக அதிகார சபை சட்டத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதா, சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதா  என உச்சநீதிமன்றம் தான் முடிவுசெய்யும். 20ஆவது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் அறிவித்தபோது அவ்வாறனா சரத்துகளைஅரசாங்கம் நீக்கியது. நாம் நாட்டின் மீது சுமையேற்றத் தயாரில்லையெனஅமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். எந்தச் சட்டமூலம் தொடர்பிலும் அமைச்சர்கள் மட்டும் இணைந்து முடிவெடுப்பதில்லையென்று தெரிவித்த அமைச்சர் பாராளுமன்றத்திலுள்ள அனைத்து எம்.பிகளும் இணைந்தே முடிவு செய்வதாகவும் அவர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. துறைமுக நகரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர் மேலும் தெரிவித்ததாவது, 

துறைமுக அதிகார சபை மூலம் சட்ட மாஅதிபரின் கருத்தறிய முன்வைக்கப்பட்டது. இது அரசியலமைப்பிற்கு முரணாக இல்லையென அவர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் சட்ட மூலத்திற்கு எதிராக சிலர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். இது தான் பொதுவான நடைமுறையாகும். சட்ட மாஅதிபர் குறிப்பிடும் அனைத்தும் அதேபோன்று நடப்பதில்லை. சில வழக்குகளை அரசாங்கம் வென்றுள்ளது. சிக்கலான வழக்குகளின் போது சட்டத்தரணிகளின் கருத்தை பெறுவதுண்டு. நீதிமன்றத்தில் அதற்கு மாற்றமான முடிவு வரலாம். அரசாங்கம் உரியமுறைகளின் படி செயற்படுகிறது. 

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எந்த சட்ட மூலத்திற்கு எதிராகவும் எந்த ஒரு பிரஜைக்கும் நீதிமன்றத்தை நாடமுடியும். நிறைவேற்று அதிகாரம், பாராளுமன்றம் என்பவற்றினால் ஏதும் குறைபாடு நடந்தால் அதனை சீர் செய்வதற்கு நீதிமன்றத்தை நாட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது வழமையானது. 

இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானதா? இல்லையா? என நீதிமன்றம் தனது வியக்கியானத்தை அறிவிக்கும். முழுமையான சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவிக்கப்படலாம். அவ்வாறு நடந்திருக்கிறது. இன்றேல் சில சரத்துகளை சாதாரண பெரும்மையுடனும் சிலசரத்துக்களை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் நிறைவேற்ற வேண்டும் எனநீதிமன்றம் அறிவிக்கலாம். சிலசமயங்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் சர்வஜன வாக்கெடுப்புடனும் நிறைவேற்றுமாறு அறிவிக்கக் கூடும். 20 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டபோது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் சர்வஜன வாக்கெடுப்புடனும் நிறைவேற்றுமாறு நீதிமன்றம் அறிவித்தது. அவ்வாறான சரத்துக்களை அரசாங்கம் நீக்கியது. நாம் நாட்டுக்கு மேலும் சுமையேற்றத் தயாரில்லை. சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதில் எமக்கு பிரச்சினை கிடையாது.

ஷம்ஸ் பாஹிம் 


Add new comment

Or log in with...