யாழிலிருந்து வவுனியா சென்ற வாள் வெட்டுக் குழு

இரு வீடுகளை சேதமாக்கியதாக புகார்

 

யாழ். நகரிலிருந்து வெள்ளை வானில் வாள்களுடன் வந்த இனந்தெரியாத குழுவொன்று இரண்டு வீடுகளுக்குள் புகுந்து  உடமைகளை சேதப்படுத்தியுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (06) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, மூன்று முறிப்பு பகுதியிலுள்ள வீடொன்றில் வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம், ஓட்டுமடத்தடியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளதுடன், பெண் வீட்டார் சம்மதமின்றி பெண்ணை அழைத்து வந்து பதிவுத் திருமணமும் செய்துள்ளார்.

இந்நிலையில், யாழ். நகரிலிருந்து வெள்ளை வான் ஒன்றில் வந்த பெண்ணின் தந்தை, சகோதரி ஆகியோருடன் முகத்தை கறுப்பு துணியால் மறைத்து கட்டியபடி வாள்களுடன் வந்த 10 க்கும் மேற்பட்ட இளைஞர் குழு பெண்ணை அழைத்து வந்த இளைஞன் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டு உரிமையாளரின் வீட்டுக்குள் புகுந்து யன்னல் கண்ணாடியை உடைத்து பெண்ணும், இளைஞனும் எங்கே எனக் கேட்டு அச்சுறுத்தியதாகவும், இதன்போது வீட்டு உரிமையாளரின் மகள் பொலிசாருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது இளைஞர் ஒருவர் பெண்ணின் கழுத்தில் வாளை வைத்து அச்சுறுத்தியதாகவும் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், வீட்டு வளவில் அமைந்துள்ள இளைஞன் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டிற்குள்ளும் வாள்களுடன் புகுந்த குழுவினர், இளைஞனும் பெண்ணும் அங்கு இல்லாத நிலையில், வீட்டு அறையின் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன், அங்கிருந்த வீட்டு தளபாடங்களையும் சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இளைஞர் குழு கறுப்பு துணிகளால் முகத்தை மறைத்து கட்டியிருந்ததாகவும், இரு வெள்ளை வான்களில் வந்ததாகவும் பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 119 பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து நிலமைகளை பார்வையிட்டு, இது தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

 

வவுனியா வசேட நிருபர்


Add new comment

Or log in with...