ரஞ்சன் விடயத்தில் மனிதாபிமானத்துடன் செயற்பட கோரிக்கை

ரஞ்ஜன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்  குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு 04 வருடம் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்ஜன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று அறிவித்தார். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு கருத்து தெரிவித்தார், “பாராளுமன்ற சட்டத்தின் 66 டி சரத்துக்கு இணங்க, ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை இல்லாது செய்யப்படுவதாக தெரிவித்துள்ளீர்கள்.

நீங்கள் இந்த தீர்மானத்தை, ரஞ்ஜன் ராமநாயக்க மூன்று மாதங்களுக்கும் மேல் பாராளுமன்றுக்கு வருகைத் தராத காரணத்தினால்தான் எடுத்ததாகக் கூறியுள்ளீர்கள்.

நான் மார்ச் 09 ஆம் திகதியன்று சபையில் வைத்து, ரஞ்ஜன் ராமநாயக்க நாடாளுமன்றுக்கு வருகைத் தராதிருப்பதற்கான அனுமதியை கோரியிருந்தேன்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் இதுதொடர்பாக எமக்கு அனுப்பியுள்ள எழுத்து மூலமான கடிதத்தில், இதற்கான அனுமதியை வழங்க முடியாது என்றும் நீதிமன்றத்தை அவமதித்தமையால் பாராளுமன்றுக்கு அவரை அனுமதிக்க முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது.

அதாவது, அவர் பாராளுமன்றுக்கு வருகைத் தராமலிருந்து மூன்று மாதங்கள் முடிவடைய, இரண்டு வாரங்களுக்கு முன்னரே நாம் இதற்கான அனுமதியை கோரியிருந்தோம்.

உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்து, இதற்கொரு முடிவு வரும்வரை அவருக்கான வாய்பொன்றை வழங்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். இதனை மனிதத் தன்மையுடன் நோக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...