உலகளாவிய ரீதியில் உற்பத்தி பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி

சமநிலை தன்மையை பேணுவதில் சிக்கல்கள்

உலகளாவிய உற்பத்தி பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் சமநிலை தன்மையை பேணுவதில் சிக்கல்கள் காணப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

27 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அரசாங்கம் குறைப்பதற்கு நடவடிக்​கையெடுத்திருந்தது. கடந்த ஜனவரி மாதம் இருந்த விலைக்கும் தற்போதைய விலைக்கும் வித்தியாசம் உள்ளது. இந்த 27 அத்தியாவசியப் பொருட்களும் சதொசவின் ஊடாக மக்களுக்கு வழங்கப்படுகிறது.

பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களிலும் குறித்த 27 அத்தியாவசிய பொருட்களினதும் விலைகளில் ஸ்திரத்தன்மையை மேற்கொள்ளவே நாம் உரிய தீர்மானங்களை எடுத்திருந்தோம்.

என்றாலும் அனைத்து மட்டங்களிலும் விலைகளில் சமநிலைத் தன்மையை பேண முடியாதுள்ளது. உலகளாவிய ரீதியில் உற்பத்தி பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கொவிட் நெருக்கடி காரணமாக கப்பல் போக்குவரத்து இடம்பெறுவதில்லை. சர்வதேச வர்த்தக வலையமைப்பு சீர்குலைந்துள்ளது. இது உலகளாவிய நெருக்கடியாகும். இதற்கு முகங்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்;. இரண்டாம் உலக யுத்த காலங்களில் போது எமது தந்தை, தாய்மார்கள் ஒருவேளை உணவை மிகவும் கஷ்டத்துக்கு மத்தியலேயே உண்டனர். கிராமங்களில் கிடைக்கக் கூடிய பொருட்களை கொண்டு உணவுத் தேவைகளை பூர்த்தி செய்திருந்தனர். ஆகவே, விலை குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் சதொச மற்றும் கூட்டுறவு சங்கங்களில் கிடைக்கின்றன என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...