எவ்விதமான முறைகேடுகளும் இன்றி மானிய அடிப்படையில் மண்ணெண்ணெய்

அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை

இரண்டாயிரத்து இருபத்தொன்று பெப்ரவரி 05ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கமைய கச்சா எண்ணெய்க்கான துறைமுக மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரியை திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில் முதல் முறையாக நேற்று (08) கூடியது. மண்ணெண்ணெய்க்கான மானியங்கள் எவ்வித முறைகேடுகளும் இன்றி நேரடியாக விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பு குறித்து ஆராயுமாறும் அது தொடர்பான நடைமுறைகளை வகுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார். அத்துடன் எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால் அரச வங்கிகளிடமிருந்து டொலர்களில் கடன் பெறுவதற்கு பதிலாக ரூபாயில் கடன் பெறுவதற்கான வாய்ப்பு குறித்து கலந்துரையாடுமாறு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பிரதமருக்கு ஆலோசனை வழங்கினார்.

குறித்த கூட்டத்தில் அமைச்சரவை துணைக்குழு உறுப்பினர்களும் அமைச்சர்களுமான உதய கம்மன்பில, டலஸ் அழகப்பெரும, டக்ளஸ் தேவானந்தா, பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல உள்ளிட்ட துறைசார்ந்த அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

 


Add new comment

Or log in with...