யாழ். கிளிநொச்சியில் அதிகாரிகளை மிரட்டுவது நிறுத்தப்பட வேண்டும்

- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிகாரிகள் மிரட்டப்படுவது தொடர்பாக எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. எனவே இச் செயற்பாடு நிறுத்தப்பட் வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரின் பெயரால் அவரின் இணைப்பாளர்கள் எனப்படுவோர் மிரட்டல் விடுப்பதாகவும், அழுத்தம் கொடுப்பதாகவும் பல முறைப்பாடுகள் எனது கவனத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. 

அவ்வாறான அநாகரீகமான செயற்பாடுகள் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருக்கு தெரிந்து நடக்கின்றதா, தெரியாமல் நடக்கின்றதா என்பது தொடர்பாக அவருடன் கலந்துரையாடவுள்ளேன். 

அவருக்கு தெரியாமல் நடக்குமாக இருந்தால், இவ்வாறான அநாகரிகமான செயலை அவர் கட்டுப்படுத்த வேண்டும். மாறாக, அவருக்கு தெரிந்துதான் அரச அதிகாரிகளுக்கான மிரட்டலும், அழுத்தங்களும் அவரது இணைப்பாளர்களால் விடுக்கப்படுமானால் அது தொடர்பில் ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் பேசி முடிவொன்றைக் காண்பேன். 

எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை யாழ். அரசாங்க அதிபரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு ஆலோசனை கூறியிருக்கின்றார்கள். ஆனால் சிரேஸ்ட அதிகாரியான கிளிநொச்சி அரச அதிபர் யாருடைய ஆலோசனையையும் கேட்கும் அவசியம் தனக்கு இல்லை என்று தகுந்த பதிலளித்துள்ளார். 

யாழ். கிளிநொச்சி மக்களினால் தொடர்ச்சியாக தெரிவு செய்யப்பட்டு சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பிராகவும், சிரேஸ்ட அமைச்சராகவும் இருக்கின்ற என்னை இந்த மக்களிடம் இருந்து சண்டித்தனத்தினால் பிரித்து விடமுடியாது. சண்டித்தனமுனம் எனக்கு தெரியாதது ஒன்றல்ல என்றார்.

மானிப்பாய் தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...