கிருமிநாசினியற்ற விவசாயச் செய்கையை ஊக்குவிக்க திட்டம்

கிருமி நாசினி பாவனையற்ற வகையில் பத்தாயிரம் ஏக்கரில் விவசாயச் செய்கை மேற்கொள்வதை ஊக்குவிப்பதே, தனது இலக்கு என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்தார். கோமரங்கடவெலவில் செய்கை பண்ணப்பட்ட நஞ்சில்லாத விவசாயச் செய்கையின் அறுவடையில் கலந்து கொண்டு பேசுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு பேசிய ஆளுநர்:

தற்போது பயன்படுத்தப்படும் நஞ்சு கலந்த கிருமிநாசினிகளால், பலர் உடல், உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காகவே கிருமிநாசினிகள் பயன்படுத்தாத ஒரு விவசாயச் செய்கையை ஆரம்பித்தோம். தற்போது இதன் அறுவடையும் இடம்பெறுகிறது. எதிர்கால சந்ததியினர் நோயற்ற சமுதாயமாக மாற வேண்டுமானால், கிருமிநாசினிகள் இல்லாத உணவு பழக்கத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

சிறுநீரக நோயாளர்கள் அதிகமாக பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாக திருகோணமலை மாவட்டத்தில் பதவிசிறிபுர  பிரதேசம் உள்ளது.

இந்த நோயின் அறிகுறியும், தாக்கமும் திடீரென அதிகரித்துள்ளமை, சுகாதார தரப்பினருக்கு பாரிய பிரச்சினையாக உள்ளது.

மக்களுக்கு வழங்கப்பட்ட  600 ஏக்கர் காணியில் எந்தவிதமான கிருமிநாசினியும் இல்லாத இயற்கையான விவசாயத்தை  ஊக்குவித்து வருகிறோம். நோயுள்ள சமுதாயத்தில் இருந்து  சிறப்பான அபிவிருத்தியை பெற முடியாது எனவே இது தொடர்பாக,பொது மக்கள் அதிக அக்கறை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்தார். விவசாய ஆலோசகர் கலாநிதி கீர்த்தி விக்கிரமசிங்க உட்பட, பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...