முறையற்ற வெளிநாட்டு பயணத்தை தவிர்க்க மட்டக்களப்பில் செயலமர்வு

சட்டவிரோதமான முறையில் முறையற்ற வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பதற்கான விழிப்பூட்டல்களை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வொன்று காணிப் பிரிவுக்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

மாவட்ட செயலக விளையாட்டு அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு அனுசரணை வழங்கியுள்ளது. விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் பயிற்றுவிப்பாளர்களுக்கான செயலமர்வினூடாக பிரதேசத்திலுள்ள புலம்பெயரும் இளைஞர், யுவதிகளுக்கு விழிப்பூட்டலை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

‘புலம்பெயர்தல் பாதுகாப்பாக இருப்பதற்கே’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இச்செயலமர்வில் சட்டவிரோதமான மற்றும் முறையற்ற வெளிநாட்டுப் பயனத்தினால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் விபரீதங்கள் தெளிவுபடுத்தப்பட்டு முறையான வெளிநாட்டுப் பயணங்களுக்கான வழிமுறைகள் எடுத்துக் காட்டப்பட்டன. இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ. ஈஸ்வரன், புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் இணைப்பாளர் திருமதி ஆர். மயூரன் மேரி, மட்டக்களப்பு பிரதேச பொதுச் சகாதார பரிசோதகர் ஏ. ராஜ்குமார், விளையாட்டு உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

- யூ.எல்.எம்.ஹரீஸ்

(வாழைச்சேனை விசேட நிருபர்)


Add new comment

Or log in with...