ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப ஜனாதிபதி பணிப்பு

- கிராமத்துடன் உரையாடலில் ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் 
- ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களுக்கு தடை ஏற்படுத்த வேண்டாம்

நீண்டகாலமாக பாடசாலைகளில் நிலவும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் கணனி தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

நியமனம் வழங்கப்பட்ட அதே பாடசாலையில் எட்டு வருட சேவையின் அடிப்படையில் சில பாடங்களுக்கான வெற்றிடங்களுக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்படும். 

பயிர் செய்கையை விரிவுபடுத்த அதிக நிலம் தேவை. எனவே, விவசாயத்திற்கு பொருத்தமான நிலங்களை விரைவாக அடையாளம் காண வேண்டும். விளைச்சலை அதிகரிக்க காணிகளின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதும் முக்கியமானதாகும். இந்த நோக்கத்திற்காக, நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த விவசாயிகளுக்கு உதவுங்கள் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.  சமூகத்தின் மிகக் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100,000பேருக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் வறுமையை ஒழிக்கும் நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்பட்டது. தொழில் பெறுவோர்களுக்கு ஒரு துறையில் மட்டும் வரையறுக்கப்படாத பல்நோக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏழ்மையான குடும்பங்களின் முன்னேற்றத்திற்காக வடிவமைக்கப்பட்ட இந்த திட்டத்தை சீர்குலைக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். 

திருகோணமலை மாவட்டத்தில், கோமரன்கடவல பிரதேச செயலக பிரிவின் கிவுலேகடவல கிராம சேவகர் பிரிவிலுள்ள கிவுலேகடவல வித்தியாலய வளாகத்தில் நடைபெற்ற “கிராமத்துடன் உரையாடல்” 12ஆவது நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

திருகோணமலை நகரிலிருந்து 45கி.மீ தூரத்தில் மொரவெவ, குச்சவெளி, பதவி ஸ்ரீபுர மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தின் ஹொரவபத்தானை பிரதேசத்திற்கு எல்லையாக கோமரன்கடவல அமைந்துள்ளது. கோமரன்கடவல நகரின் மத்தியிலிருந்து கிவுலேகடவல கிராமத்திற்கு உள்ள தூரம் 8கி.மீ ஆகும். அநுராதபுர யுகத்திற்கு சொந்தமான பல தொல்பொருள் எச்சங்களை கொண்ட கிராமமாக தொல்பொருள் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோமரங்கடவல மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்த பிரதேசங்களாகும். 

கிவுலேகடவல, அடம்பனே, குட்டிக்குளம் மற்றும் கோணபெந்திவெவ ஆகிய கிராமங்கள் கிவுலேகடவல கிராம சேவகர் பிரிவுக்கு சொந்தமானவையாகும். 416குடும்பங்களைக் கொண்ட கிவுலேகடவல கிராமத்தின் மக்கள் தொகை 1191ஆகும். இவற்றில் 125குடும்பங்கள் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களாகும். நெற் பயிர்ச்செய்கை பெரும்பான்மையான மக்களின் பிரதான ஜீவனோபாயமாகும். சோளம், கௌபி, கடலை மற்றும் மரக்கறி பயிர்களும் இடைப் பயிர்களாக பயிரிடப்படுகின்றன. 

ஜனாதிபதி “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றுவதற்காக கிவுலேகடவல பாடசாலைக்கு செல்லும் வழியில் பாதையின் இரு புரங்களிலும் கூடியிருந்த மக்களிடம் பிரதேசத்தின் விபரங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். அருகிலிருந்த சில வீடுகளில் இருந்த மக்களுடனும் உரையாடிய ஜனாதிபதி இம்முறை போகத்தின் போது நெல் விளைச்சல் குறித்தும் கேட்டறிந்தார். கிலோவொன்றுக்கு 50ரூபா குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியாத ஈரலிப்பான நெல்லை 43ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி விவசாயிகளிடம் தெரிவித்தார். தங்களது நெல் அறுவடையை அரசாங்கத்திற்கோ அல்லது கொள்வனவு செய்யும் எந்தவொரு தரப்பினருக்கும் தங்களது விருப்பத்தின் பேரில் விற்பனை செய்ய முடியும் என்றும், அரசாங்கம் அதற்கு எவ்வித நிபந்தனையையும் விதிக்க வில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

'கிராமத்துடன் உரையாடல்' திட்டம் ஆரம்பமாவதற்கு முன்பு, எஸ். எல். டி மொபிடெல் நிறுவனமும் பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் பாடசாலை சேவைகள் இராஜாங்க அமைச்சும் இணைந்து கிவுலேகடவல பாடசாலையில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையைத் திறந்து வைத்து, டயலொக் நிறுவனம் வழங்கிய தொலைக்காட்சி தொகுதி மற்றும் இணைப்பை ஜனாதிபதி பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.   


Add new comment

Or log in with...