வரட்சியான காலநிலையுடன் மின்சார பயன்பாடு அதிகரிப்பு

வரட்சியான காலநிலையுடன் மின்சார தேவை அதிகரித்துள்ளதாக மின்சார சபையின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜெயரத்ன தெரிவித்தார்.  

கேள்விக்கு ஏற்றவாறு மின்சாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு விசேட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வரட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி நூற்றுக்கு 20வீதமாக காணப்படுவதாக சுலக்ஷன ஜெயவர்த்தன மேலும் குறிப்பிட்டார். எனவே மின்சாரத்தை முடிந்தளவு சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50கிலோ மீற்றர் வரை வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.  

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 


Add new comment

Or log in with...