ஜெனீவா பிரேரணை; இந்தியா எங்களை கைவிட முடியாது

ஜெனீவா பிரேரணை; இந்தியா எங்களை கைவிட முடியாது-India Cannot Abandon Us-Sri Lanka-Jayanath Colombage

அயலவர்களுக்கு முன்னுரிமை என்பதே அடிப்படை

ஜெனீவாவில் தனது செயல் வடிவிலான ஆதரவை இந்தியா, இலங்கைக்கு வழங்கவேண்டுமென இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் இந்தியா எங்களை கைவிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து வெளிவரும் தி ஹிந்து நாளிதழுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தெற்காசிய நாடுகள், ஜெனீவாவில் ஆதரவளிக்காவிட்டால் இலங்கை மிகவும் குழப்பமடையுமென தெரிவித்துள்ள ஜயநாத் கொலம்பகே, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இலங்கையைப் போன்று கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாலும், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாலும் இலங்கைக்கு ஆதரவளிக்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எமது ஜனாதிபதி ஆதரவுகோரும் கடிதத்தை முதலில் இந்திய பிரதமருக்கே அனுப்பினார். ஏனென்றால் தெற்காசிய ஒற்றுமை குறித்து நாங்கள் உணர்வுபூர்வமாக உள்ளோமென தெரிவித்துள்ளார் என்றும் வெளியுறவுச் செயலாளர் ஜயநாத் பொலம்பகே தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அதன் அயல்நாடுகளின் ஆதரவு மிகவும் அவசியமாக உள்ளது, நாங்கள் மிகவும் அசாதாரணமான ஒன்றை கேட்கவில்லை.

நாங்கள் அயலவர்களுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையை அடிப்படையாக நாங்கள் இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...