'ஐஸ் மஞ்சு' வின் சகோதரர் உட்பட ஏழு பேர் கைது

- திருகோணமலை நகைக்கடை கொள்ளை
- நகைகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை

திருகோணமலையில் நகைக் கடையொன்றில் இடம்பெற்ற 38 இலட்சம் ரூபா கொள்ளை சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக சந்தேகிக்கப்படும் நபர் உட்பட சந்தேக நபர்கள் 07 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இக் கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக சந்தேகிக்கப்படும் நபர் பல குற்றச் செயல்களுடன் தொடர்பு காரணமாக தலைமறைவாகியுள்ள ‘ஐஸ் மஞ்சு’ என்பவரின் சகோதரர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். திருகோணமலை பகுதியில் அமைந்துள்ள தங்க நகை விற்பனை நிலையமொன்றில் கடந்த 08 ஆம் திகதி 38 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது திருகோணமலை - கோணேஸ்வரம் கடற்பகுதியில் படகொன்றில் வந்துள்ள கொள்ளையர்கள், தங்க நகைகளை கொள்ளையிட்டு மீண்டும் படகிலேயே தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந் நிலையில் தற்சமயம் இச் சம்பவம் தொடர்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது திருகேணமலை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரே இக் கொள்ளைத்திட்டத்தை திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புக் கொண்டு தற்போது தலைமறைவாகியுள்ள 'ஐஸ் மஞ்சு' எனப்படும் சந்தேக நபரின் சகோதரர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்துள்ள பொலிஸார் , அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் வெளிநாட்டு துப்பாக்கி ஒன்றும் அதன் ஆறு தோட்டாக்களையும் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை, சந்தேக நபர்களால் தப்பிச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட படகின் உரிமையாளரை கைது செய்துள்ள பொலிஸார், சந்தேக நபர்கள் பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளை மீட்பதற்காக பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Add new comment

Or log in with...