ஐ.நா. மனித உரிமைகள் பேரவை; இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள்

வாக்கெடுப்பின்போது மேலும் சில நாடுகள் ஆதரவளிக்கும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய நாடுகளில் 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கருத்துக்கள் வெளியிட்டுள்ளன.

எதிராக 15 நாடுகளும் கருத்துகளை முன்வைத்துள்ளன. அத்தோடு வாக்கெடுப்பின் போது மேலும் சில நாடுகள் ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கைக்கு எதிராக புதியதொரு தீர்மானத்தை முன்வைப்பதற்கு சில நாடுகள் முன்வந்துள்ளன.

இதற்கு பிரித்தானியா தலைமைத்துவம் வழங்கவுள்ள நிலையில் அதற்கு இலங்கை எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியா, ஜப்பான் உட்பட 10 நாடுகள் நடுநிலை வகிக்கின்றன.

இந்நிலையில் பிரித்தானியா, நோர்வே, கனடா, ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்த்து கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து பேசிய 21 நாடுகளில் பத்து நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளாகும்.

மேலும் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஈரான், வியட்நாம், மாலைதீவுகள், கியூபா, நிகரகுவா, எரிட்ரியா, நேபாளம், கம்போடியா, லாவோஸ், அஜர்பைஜான், பெலாரஸ், வட கொரியா, காபோன், பிலிப்பைன்ஸ், சிரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இவற்றில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் உரையாற்றுகையிலேயே ஜெனீவாவுக்கான சீனாவின் நிரந்தர வதிவிட பிரிதிநி ஷெங் ஹு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

இலங்கையின் அரசியல் ஸ்தீரதன்மை, இன ஒற்றுமை மற்றும் தேசிய நல்லிணக்கம் போன்றவற்றை இலங்கை வலுவாக பேணுவதாகவே நட்பு நாடென்ற வகையில் சீனா நம்புகின்றது. தேசிய அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிக்கான சாதனைகளுக்காக வாழ்த்துக் கூறுகின்றோம்.

மனித உரிமைகளை தீவிரமாக ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் நிலையான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை முன்னேற்றவும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பாதிக்கப்பட்ட குழுக்களின் உரிமைகளை பாதுகாத்தல், தேசிய நல்லிணக்கத்தை முன்னெடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் போன்ற விடயங்களில் இலங்கையின் முயற்சிகளையும் சாதனைகளையும் பாராட்டுகின்றோம்.

மனித உரிமைகள் மீதான அரசியல் மயமாக்கல் மற்றும் இரட்டை நிலைப்பாடு போன்றவற்றை சீனா எதிர்ப்பதோடு, ஏனைய நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.

இலங்கை தொடர்பான அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை குறித்து கவலையடைகின்றோம்.

அத்துடன் இலங்கை வழங்கிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் உள்வாங்கப்படாமையிட்டு வருந்துகின்றோம்.

தலையீடு, தடுப்பு மற்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உத்தேச இலக்குக்கான தடைகள் என்பவை இலங்கையின் உள்ளக விவகாரங்கள் மீதான தலையீட்டை தெளிவாக குறிப்பிடுவதுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையை மீறுவதுமாகவே உள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் என்பன இலங்கை விடயத்தில் பக்கச்சார்பற்ற தன்மையையும் அரசியல் ஆக்கப்படாத நிலைமையை உறுதியாக பின்பற்றும் என்று நம்புகின்றோம்.

அனைத்து நாடுகளினதும் இறையான்மை, அரசியல் சுதந்திரத்தை மதித்தல், ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் மற்றும் ஒத்துழைப்புகளை ஆதரித்தல், பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவது அழுத்தங்களை பிரயோகிப்பது தவிர்க்கப்பட வேண்டும். ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். இலங்கை தொடர்பான தீர்மானம் மற்றும் அறிக்கையின் தன்மை குறித்து சீனா நன்கு அறியுமென குறிப்பிட்டிருந்தார். அதே போன்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவும் சீன வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீக்கு ஆதரவை தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

அந்த வகையில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை கூட்டாக பாதுகாக்க இலங்கையுடன் சீனா ஆதரவாக செயற்படும் என்பதை வலியுறுத்துகின்றோம். மேலும் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகள் மற்றும் ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாததாக அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...