- மத்திய வங்கியின் 70 ஆண்டு நிறைவு ஞாபக வெளியீடு
இலங்கை மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் ஞாபக நாணயக் குற்றி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மனினால் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இது இலங்கை மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 7 பக்கங்களைக் கொண்ட (எழு கோணி) வடிவத்துடன் நிக்கல் பூசப்பட்டு உருக்கினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் 03 ஆம் திகதி முதல், 5 மில்லியன் நாணயங்களை புழக்கத்தில் விடவுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நாணயக் குற்றி கடந்த வருடம் டிசம்பரில் புழக்கத்தில் விடப்படாத நிலையில், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கி கடந்த 1950ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அதன் செயற்பாடுகாளை ஆரம்பித்தது. அந்த வகையில் கடந்த வருடம் இலங்கை மத்திய வங்கி 70 வருட பூர்த்தியை அடைந்துள்ளது.
நாணயம் பற்றிய மேலதிக தகவல்கள்
Add new comment