கல்முனையில் முதன் முறையாக வெற்றிகரமான உழுந்து செய்கை

விவசாய உற்பத்தியை மேலும் விஸ்தரிக்க அரசாங்கம் பல வேலைத் திட்டங்களை நாடளாவிய ரீதியில் மேற்கொண்டு வருகின்றது. விவசாயம் தற்போது நல்ல வருமானத்தை ஈட்டும் துறையாக மாறியுள்ளது. உள்ளூர் விவசாய உற்பத்தி மூலம் விவசாயிகள் மட்டுமல்ல, மறைமுகமாக பலரும் நன்மையடைவர்.

அந்த வகையில் கல்முனையில் முதன் முறையாக அதிகமான உழுந்து செய்கை பண்ணப்பட்டு வெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டுள்ளது. ‘சௌபாக்கியா’ வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கை திட்டத்தின் கீழ் விவசாயத் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் உபஉணவு பயிர்ச் செய்கையை அதிகரிக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை விவசாய விரிவாக்கல் நிலைய பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலும் உபஉணவுப் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உபஉணவு பயிர்ச் செய்கையில் ஒன்றான உழுந்து செய்கை சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ளது.

உழுந்து அறுவடை செய்யும் நிகழ்வு கல்முனை அன்பு சகோதர இல்லத்தில் விவசாய விரிவாக்கல் நிலைய போதனாசிரியர் திருமதி எஸ்.கிருத்திகா தலைமையில் அண்மையில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.அஹமட் சனீர் அறுவடை நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் உழுந்து செய்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

“விவசாயத் துறையை மேலும் விருத்தி செய்ய அரசாங்கம் பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. விவசாய நடவடிக்கையை மேற்கொள்வோரை ஊக்குவிக்க எமது விவசாயத் திணைக்களம் என்றும் தயாராகவுள்ளது. இவ்வாறான உற்பத்தி மூலம் நல்ல வருமானத்தை விவாசாயிகள் ஈட்ட முடியும்” என இங்கு உரையாற்றும் போது பிரதி விவசாயப் பணிப்பாளர் அஹமட் சனீர் தெரிவித்தார் .

கல்முனை விவசாய விரிவாக்கல் நிலைய போதனாசிரியர் திருமதி எஸ்.கிருத்திகா இங்கு உரையாற்றுகையில் “எமது விவசாய விரிவாக்கல் பகுதியில் விவசாயத் திணைக்களத்தின் மூலம் பல விவசாய ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். இதன் அங்கமாக விவசாய விரிவாகல் நிலையத்தின் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் முதன் முறையாக அதிகளாவான உழுந்து செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் உழுந்து எமக்கு நல்ல விளைச்சலை பெற்றுத் தந்துள்ளது. உழுந்துச் செய்கைக்குத் தேவையான வழிகாட்டலையும் ஆலோசனைகளையும் உழுந்து பயிர்ச் செய்கையாளருக்கு வழங்கினோம். விவசாய நடவடிக்கையை மேற்கொள்ள எங்களுக்கு இங்குள்ளவர்கள் சிறந்த ஒத்துழைப்பினை வழங்கினர். இதற்காக நன்றியைத் தெரிவிக்கிறேன்” என்றார்.

இந்த நிகழ்வின் போது அருட்சகோதரர் ஜெ.டொமினிக், மறுபயிர் செய்கை விவசாய பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.எச்.ஏ.நிஹார், விவசாய விரிவாக்கல் நிலையத்தின் தொழில்நுட்ப உதவியாளர் கே.குகழேந்தினி மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் .

கல்முனை பிரதேசத்தில் முதன் முறையாக அதிகமான உழுந்து வெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும் .


Add new comment

Or log in with...