வடக்கு தீவுகளை எந்நாட்டிற்கும் வழங்கும் தீர்மானமும் இல்லை

மின் சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அதிரடி

வடக்கில் உள்ள தீவுகளை எந்த நாட்டிற்கும் வழங்கப்போவதில்லை என மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலை தீவு ஆகிய தீவுகளுக்கு தற்போது டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் அங்கு காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் 12 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியுடன் சீனாவின் பங்களிப்புடன் குறித்த திட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்திருந்தது.

இதேவேளை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, வடக்கில் இந்த திட்டத்திற்காக 12 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை நன்கொடையாக இலங்கைக்கு வழங்குவதாகவும் அரசாங்கத்திடம் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் மக்களின் நலன்களை கருத்திற்கொண்டு முடிவு எட்டப்படும் என்றும் மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...