அரச, தனியார் துறையினருக்கு வார இறுதியில் தடுப்பூசி

- பதில் சுகாதார அமைச்சர் நடவடிக்கை

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று வரை இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. பொது மக்களுக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று வரை 02 இலட்சத்து 07 ஆயிரத்து 843 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அதேவேளை, தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வரும் பிரதேசங்களில் இதுவரை தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாத அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வார இறுதியில் அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட சில கிராமசேவகர் பிரிவுகளில் நேற்று முன்தினம் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சில பிரதேசங்களில் மாத்திரம் மக்களின் பங்கேற்பு குறைவாக காணப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 30 வயது முதல் 60 வயது வரைக்குமான அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...