உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியொன்றை, சட்ட மாஅதிபர் ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து கோரியுள்ளார்.
சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர், அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனைத் தெரிவித்தார்.
உரிய சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்தல் மற்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் தொடர்பிலான அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு சட்ட மாஅதிபர் இக்கோரிக்கையை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையின் பிரதியொன்றை தனக்கும் வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதிக்கு எழுத்துமூல கோரிக்கையொன்றை அண்மையில் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கடந்த பெப்ரவரி 01ஆம் திகதி, ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஆணைக்குழுவின் தலைவர் உயர்நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வாவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
Add new comment