- தியாக தீபம் திலீபன் உள்ளிட்ட பலருக்கும் அஞ்சலி
- யாழ். பல்கலை நினைவுத்தூபிக்கு முள்ளிவாய்க்கால் மண் கையளிப்பு
வடக்கு கிழக்கில் சிறுபான்மை மக்களின் வாழ்வுரியையும் வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரணி பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் யாழ்ப்பாணம் மாநகரை இன்று பிற்பகல் வந்தடைந்தது.
தந்தை செல்வா நினைவிடம், உலகத் தமிழர் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டோர் தூபி, தியாக தீபம் திலீபனில் நினைவுத் தூபி ஆகிய இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை உலகிற்கு வெளிப்படுத்தும் நோக்கில், வடக்கு கிழக்கு சிவில், சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில்,பல்வேறு அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் இந்தப் பேரணி கடந்த புதன்கிழமை (03) பொத்துவில் ஆரம்பமானது.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஊடாக நான்காவது நாளான நேற்று கிளிநொச்சியை வந்தடைந்தது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், நல்லூர் தியாக தீபம் நினைவுத் தூபி, நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றல் ஊடாக பேரணி பருத்தித்துறை வீதி ஊடாகவடமராட்சி மண்ணை வந்தடைந்தது.
முன்னதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலுக்குச் சென்ற பேரணி, நேற்றுமுன்தினம் முள்ளிவாய்க்கால் மண்ணில் எடுக்கப்பட்ட கைப்பிடி மண்ணை, பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு பயன்படுத்த மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இன அடக்குமுறைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி இன்று (07) ஞாயிற்றுக்கிழமை மதியம் 12மணிக்கு தென்மராட்சி பிரதேசத்தை வந்தடைந்தது. இதன்போது சாவகச்சேரி பகுதியில் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தீப் பந்தந்தை ஏந்திய வண்ணம் மத ஆராதனைகளில் ஈடுபட்டு பின்னர் யாழ் நோக்கி தமது பயணத்தை தொடர்ந்தனர்.
(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன், சாவகச்சேரி விசேட நிருபர் - சுபேஷ், யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)
Add new comment