ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் பைடன் முதல்முறை தொலைபேசி உரையாடல்

தேர்தல் தலையீடு பற்றி எச்சரிக்கை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் முதல்முறை தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தேர்தல் தலையீடு பற்றி எச்சரிக்கை விடுத்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் தற்போது இடம்பெறும் எதிர்க்கட்சியனரின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அமெரிக்கா–ரஷ்யாவுக்கு இடையே கடைசியாக எஞ்சியிருக்கும் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பிலும் இந்த உரையாடலில் பேசப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கும் ஜோ பைடனுக்கு புட்டின் தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டதாக இந்த தொலைபேசி உரையாடல் பற்றி ரஷ்யா வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தொடர்ந்தும் தொடர்புகளை முன்னெடுத்துச் செல்ல இருவரும் இணங்கியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவிக் காலத்தில் அவரது நிர்வாகம் ரஷ்யாவுக்கு எதிராக கடும் நிலைப்பாடுகளை எடுத்தபோதும் டிரம்ப் சிலநேரம் சுமுகமான போக்கையே கடைப்பிடித்து வந்தார். புட்டினை பாதுகாத்து பேசுவதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டுகளும் எழுப்பப்பட்டன.

எனினும் ரஷ்ய எதிர்த்தரப்பு அரசியல்வாதி அலெக்சே நேவல்னி அண்மையில் கைதுசெய்யப்பட்டது குறித்து, பைடன் அக்கறை தெரிவித்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

பெரிய அளவிலான இணைய ஊடுருவல் இயக்கத்தில் ரஷ்யாவின் ஈடுபாடு குறித்தும் பைடன், புட்டினுக்கு நெருக்குதல் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான அணுவாயுதக் கட்டுப்பாட்டு உடன்படிக்கை அடுத்த மாதம் காலாவதியாகும் முன்னர், அதனை நீடிப்பதற்கான பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதுவே அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து கொண்டுள்ள கடைசி, ஆயுதக் கட்டுப்பாட்டு உடன்படிக்கையாக உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துபேசினர்.

"எங்களுக்கு அல்லது எங்கள் நட்பு நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்கா தனது தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக செயல்படும் என்பதை ஜனாதிபதி பைடன் தெளிவுபடுத்தினார்" என்று அமெரிக்க அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பைடன் எழுப்பியதாக வெள்ளை மாளிகையால் குறிப்பிடப்பட்ட எந்த ஒரு விடயமும் கூறப்படவில்லை.

"ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதன் மூலம் இரு நாடுகளின் நலன்களையும் உறுதிசெய்வது குறித்தும், உலக நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதில் இருநாடுகளுக்கும் உள்ள சிறப்பு பொறுப்பு குறித்தும் பேசினர்" என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...