இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தில்ஹார லொகுஹெட்டிகே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு குறியீட்டின் (ICC Anti-Corruption Code) கீழ் மூன்று குற்றங்களின் கீழ் குற்றமிழைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ICC 3 பேர் அடங்கிய சுயாதீன ஊழல் தடுப்பு குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, அவர் இவ்வாறு குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்புச் குறியீட்டின் கீழ், கடந்த 2019 நவம்பரில் தில்ஹாரா லொகுஹெட்டிகே குற்றவாளியாக பெயரிடப்பட்டு, போட்த் தடை விதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, குறித்த அனைத்து குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, அவர் மீது விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்பதோடு, அவர் மீதான ஏனைய தண்டனைகள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.
ICC இன் 2.1.1, 2.1.4, 2.4.4 ஆகிய 3 குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
போட்டி நிர்ணயத்திற்கு துணை புரிதல் அல்லது அதற்கு காரணமாக இருத்தல், அதற்கு ஆலோசனை வழங்குதல், ஆட்ட நிர்ணயத்திற்கு அழைப்பு விடுக்கப்படும்போது அது தொடர்பில் தகவல்களை வெளியிடாதிருத்தல் உள்ளிட்ட பிரிவுகளுக்கமைய அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், தடை விதிக்கப்பட்ட காலத்தில் T10 லீக் போட்டித் தொடரில் கலந்து கொண்டமை தொடர்பில், எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் (ECB) ஊழல் தடுப்பு குறியீட்டின் நான்கு எண்ணிக்கையை மீறியதாக எமிரேட்ஸ் கிரிக்கெட் சபை (ECB) சார்பாக, ICCயினால் தில்ஹார லொகுஹெட்டிகே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக ICC தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தில்ஹார லொகு ஹெட்டிகே இலங்கைக்காக 9 ஒருநாள் மற்றும் 2 ரி20 போட்டிகளில் விளையாடி, 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதோடு, 101 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.
அவர் இறுதியாக 2013 இல் போர்ட் ஒப் ஸ்பெயினில் இந்தியாவுக்கு எதிராக இடம்பெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment