பொதுமக்களுக்கான சேவையில் விசுவாசத்துடன் நடந்துகொள்வது அரச ஊழியர்களின் பொறுப்பாகும்

அரசாங்க உழியர்களின் சம்பளங்கள் மக்களின் வரிப்பணத்தில் கிடைக்கும் வருமானத்திலே வழங்கப்படுகின்றன. எனவே,பொது மக்கள் விடயத்தில் விசுவாசமில்லாமல் நடந்து கொள்வோரை, அரச ஊழியர்களென அழைக்க முடியாதென  மத்திய மாகாண ஆளுநர், லலித் யூ கமகே தெரிவித்தார்.உதவி முகாமையாளர் களுக்கு நியனம் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே,அவர் இவ்வாறு கூறினார்.கண்டியில் உள்ள மத்திய மாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (23) நடந்த கூட்டத்தில்,பேசிய அவர்:பொது சேவையில் இணையும்  வாய்ப்புக்கள் சகலருக்கும் கிடைப்பதில்லை.மக்களுடன் நெருக்கமாக பணியாற்றுவது, அதற்கான சிறந்த வாய்ப்பை ஏற்படுத்துவது,மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் உறுதியுடன் செயற்படுவது என்பவையே,ஒரு உண்மையான அரச ஊழியரின் நற்பண்புகளாகும்.

பொதுச் சேவையில் உள்ள களங்கத்தை ஒழிக்க, மிகவும் திறமையான மற்றும் நம்பகமான சேவையை வழங்க வேண்டும்.  புதிதாக நியமனம் பெற்றோர்,இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நியமனம் பெறுபவர்களில் சிலர்,உள்ளூராட்சி சபைகளில் பணிக்கு அமர்த்தப்படுவர். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இவர்கள் மிகத் திறமையுடன்

செயற்படல் அவசியம். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், பொது சேவை குறித்து, நற்பெயரைப் பெறுவதும் அரச அதிகாரிகளின் கைகளில் தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாகாணத்தின் பிரதான  செயலாளர் காமினி ராஜரத்ன, ஆளுநரின் செயலாளர் அன்டன் திலகரத்ன, மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் மத்திய மாகாண பொதுச் சேவை ஆணைகுழுவின்  செயலாளர்  உள்ளிடட பலர்  இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.மத்திய மாகாணத்திற்கான  உதவி முகாமைத்துவ சேவைக்காக  2020 ஆம் ஆண்டில்  நடைபெற்ற திறந்த போட்டிப்  பரீட்சை தேர்வில் தெரிவு  செய்யப்பட்ட 182 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.

(எம்.ஏ.அமீனுல்லா)


Add new comment

Or log in with...