நாட்டை முதன்மைப்படுத்தி அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும்

- முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி

நல்லிணக்கம், சகிப்பு தன்மை ஆகியவற்றைக் கொண்ட  நாட்டு பற்றுள்ள சமூகத்தை உறுதிப்படுத்த நமது நாடு மத சார்பற்ற குடியரசாக பிரகடனப்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய சமாதான கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளதாக, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.

இது தொடர்பாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பினால் புதிய அரசியல் அமைப்பை வரைவதற்கு நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டை முதன்மைப்படுத்திய அரசியல் யாப்பு ஒன்றை எல்லா கட்சிகளும் சேர்ந்து உருவாக்க வேண்டும் என்று நாம் முன்வைத்து உள்ளோம். இதற்கு முன்னர் இடம்பெற்ற யாப்பு மாற்றங்கள் அனைத்துமே தனிப்பட்ட நபர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செய்யப்பட்டவை என்று கோடிட்டு காட்டி இருக்கின்றோம்.

நல்லிணக்கம், சகிப்பு தன்மை, வெளிப்படை தன்மை ஆகியவற்றை அணிகலன்களாக கொண்ட முழுமையான நாட்டுப் பற்றுள்ள சமூகத்தை உறுதிப்படுத்துவதற்காக மத சார்பற்ற குடியரசாக நமது நாடு பிரகடனம் செய்யப்படுதல் வேண்டும் என்று முக்கியமாக வலியுறுத்தி இருக்கின்றோம்.

மக்களுக்கும், நீதித் துறைக்கும் பொறுப்பு கூற கூடிய வகையிலான ஜனாதிபதி முறைமையே நமது நாட்டுக்கு பொருத்தமானது என்றும்  எமது முன்மொழிவில் வலிறுத்தப்பட்டுள்ளது. இந்நாட்டில் காலம் காலமாக வாழ்ந்து வருகின்ற சிறுபான்மை மக்கள் அவர்களுடைய இருப்பையும், மத, கலாசார விழுமியங்களையும் பாகுபாடின்றி பேணி பாதுகாப்பதற்கான உரிமைகளை புதிய அரசியல் உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக சிறுபான்மை மக்களின் மத அனுட்டானங்களை பின்பற்றுகின்ற உரிமையில் வேற்று மத தலையீடு இருக்க மாட்டாது என யாப்பு ரீதியாக உறுதிப்படுத்தி தரப்படல் வேண்டும்.

இன பிரச்சினையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எமது நாட்டில் இனி வரும் காலங்களில் சமூகங்களுக்கு இடையில் ஏற்பட கூடிய பிரச்சினைகளை ஆராய்ந்து நடுநிலையான தீர்மானத்தை எடுத்து கட்டுப்படுத்த கூடிய அதிகாரங்களை கொண்ட தேசிய நல்லிணக்க பேரவை அமைக்கப்படுவதுடன் இதற்குள் எல்லா சமயத்தவரில் இருந்தும் மிக பொருத்தமானவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுதல் வேண்டும்.

தேசிய கீதத்தை ஒருவர் விரும்புகின்ற மொழியில் பாட கூடியதாக இருத்தல் வேண்டும். பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம், தண்டனை விலக்கீட்டு சிறப்புரிமை ஆகியன தனிப்பட்ட நபர்களுக்கு இருக்க கூடாது. அதே போல அவசர கால சட்ட விதிகளை பிறப்பிக்கின்ற அதிகாரம் அமைச்சரவைக்கு மாத்திரமே இருத்தல் வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு நியமிக்கப்படுகின்ற ஆளுநர்கள்,  செயலாளர்கள், அதிகாரிகள் திணைக்கள தலைவர்கள் போன்றோர் சரளமாக தமிழ் தெரிந்தவர்களாக இருத்தல் வேண்டுமெனவும் அவ் அவறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஒலுவில் விசேட நிருபர்)


Add new comment

Or log in with...