- கொம்மாந்துறையில் குடும்பத்துடன் குட்டையில் மூழ்கியதில் மீனவர் மரணம்
- உறுகாமம் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு வேறு சம்பவங்களில் மீனவர்கள் இருவர் இருவர் நீரில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னதாக ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கொம்மாதுறை தீவு, பிரப்பம் வளைவு பகுதியில் உள்ள வீதியில் குழிக்குள் குடும்பத்தோடு வீழ்ந்து மூழ்கிய மீனவர் ஒருவர் நேற்று (23) மாலை 5.00 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வந்தாறுமூலையில் வசிக்கும் பேதுறு சிவராசா (62) என்பவரே சேறும் சகதியும் நிறைந்த குழிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டவராகும்.
இவர் தனது மனைவி மற்றும் 9 வயது 13 வயதுடைய பேரப்பிள்ளைகள் இருவருடனும் வழமையாக மீன்பிடித் தொழில் செய்து வருபவர் என்றும் சம்பவ தினம் அந்தக் குடும்பத்தினர் பிரப்பம் வளைவுப் பகுதியிலுள்ள வீதியைக் கடந்தபோது அங்கு நீர் நிரம்பியிருந்த வீதியிலுள்ள ஆழமான குழிக்குள் சேற்றில் மூழ்கியுள்ளார்.
வீதியால் தனது 9 வயதுப் பேரனை சுமந்து கொண்டு சென்ற கணவர் வீதியில் இருந்த குழிக்குள் விழ பின்னால் வந்த மனைவியும் வீழ்ந்துள்ளார்.
இதனை அறிந்த மூன்றாவதாக வந்த 13 வயதான பேரன் தனது தம்பியின் தலைமுடி நீருக்கு வெளியே தெரியவர அவரைப் பிடித்ததிழுத்து வெளியே கொண்டு வந்து விட்டு பாட்டியின் தலைமுடியையும் பிடித்திழுத்து காப்பாற்றிவிட்டு பாட்டனாரைத் தேடிய பொழுது அவர் காணாமல் போயுள்ளார்.
சிறுவன் அப்பகுதியில் கூச்சலிட்டு அயலில் நின்றவர்களை அழைத்து அவர்களின் உதவியுடன் தேடிய பொழுது குறித்த நபர் சடலமாகவே மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் உடற்கூராய்வுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேவேளை மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டிய உறுகாமம் புதூர் துறையடியில் மீன்பிடிப்பதற்காக தோணியில் சென்ற இளம் மீனவர் ஒருவர் நேற்றையதினம் (23) காணாமல் போயிருந்தார்.
உறுகாமம், புதூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிமுஹம்மது அப்ரார் (24) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு குளத்தில் மூழ்கியவராவார்.
நண்பகலளவில் மீன் பிடிக்கச் சென்றவர் காணமல் போயுள்ள தகவல் மாலையளவிலேயே தெரிந்ததும் உறவினர்களும் மீனவர்களும் தேடுதலில் ஈடுபட்டனர். எனினும் இன்று (24) பிற்பகல் கடற்படை சுழியோடிகள் இவரது சடலத்தைக் கண்டு பிடித்துள்ளனர்.
இவ்விரு சம்பவங்கள் குறித்தும் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
(பெரியபோரதீவு தினகரன் நிருபர் - வ. சக்திவேல்)
Add new comment