யானோக்குங் காலை இவ்வாறு பிறரால் காணப்படாமல் பிறரைக் காணும் வழக்கம் தமிழரிடத்து உண்டு என்பதைத் தமிழிலக்கியங்கள் மூலம் அறிய முடிகிறது.
பெண்டிர் சிலர் பிறர் தம்மைக் காணுங்கால் காணாது காணாக்கால் காண்பது என்பதை பண்டைத் தமிழர் கண்டறிந்திருந்தனர். இது பற்றியே "யானோக்குங் காலை நிலனோக்கும் நோக்காக்கால் தானோக்கி மெல்ல நகும்' என "குறிப்பறிதல்' அதிகாரத்தில் திருவள்ளுவர் பதிவு செய்துள்ளார்.
ஆங்கிலப் புலவர்களுள் ஒருவரான ஸ்டீவென்சன் தமது கட்டுரையொன்றில் பிறர் காணாமல் தான் கண்ட காட்சியொன்றை இவ்வாறு வருணிக்கின்றார்.
“மிஸ்சென்டன் என்ற நகரத்தை இரவு நேரத்தில் அவர் சுற்றிவரும்போது இருள் சூழ்ந்த அந்த இரவில் அவர் கண் ஓர் இல்லத்தின் சாளரத்தின் வழியே உள் நோக்கியுள்ளது. அங்கு தன் மடிமீதிருந்த ஒரு குழந்தைக்கு அழகுடைச் சிறுமி ஒருத்தி கதை சொல்லிக் கொண்டிருந்தாள். அவளருகே கிழவியொருத்தி கணப்பின் முன் உட்கார்ந்த வண்ணம் தூங்கி வழிந்து கொண்டிருந்தாள். அதனைத் தாம் உள்ளிருப்பவர் காணாது கண்டதாகவும் கண்டு பெருமகிழ்ச்சி எய்தியதாகவும்” வர்ணித்துள்ளார்.
துணை இவ்விதம் பிறர் தன்னைக் காணாது தான் அடுத்தவரைக் காண்பதற்கு உதவியாயிருப்பன தூண், கதவு முதலியன.
இவற்றையே பெரும்பாலும் பெண்டிர் துணைக்குக் கொள்வது கண்கூடு. குடுமி தேய கதவடைத்த தாயாருக்கும் மகளுக்கும் நடந்த கதைகளை முத்தொள்ளாயிரம் நமக்கு முந்தியுறுத்தியுள்ளது.
புறநானூறு தரும் இலக்கியச் செய்தியில் காதலனைத் தேடிச்சென்ற தலைவி அவன் இல்லத்திலுள்ள காவற்பெண்டு என்ற செவிலித்தாய் ஒருத்தியை தனக்குரிய அவளுடைய மகன் எங்கு சென்றிருக்கிறான் என்று வினவுகிறாள். வினவும்போது அவள் ஒரு தூணை மறைவாக நின்று பற்றிக்கொண்டு நின்றாள். பிறர் தன்னைக் காணாது தன் துணையைத் தேடி தூண் மறைக்க நின்றாள் என்று அறிகின்றோம்.
சிலப்பதிகாரத்திலும் இத்தகைய காட்சியொன்று காணக் கிடைக்கிறது. மதுரையை நோக்கிப் புறப்பட்ட கோவலனும் கண்ணகியும் காட்டு வழியே சென்று "ஐயை' என்பவளது கோட்டத்தை அடைகிறார்கள்.
அங்கு வேடுவ மகளாகிய "சாலினி' என்னும் தேவராட்டி நடந்து தேய்ந்த கால்கள் நொந்து வருந்தியிருந்த கண்ணகியை நோக்கி "ஒரு மாமணியாய் உலகினுக்கு ஓங்கிய திருமாமணி' என்று தன்மேல் வந்துற்ற தெய்வத் தன்மையினால் புகழ் மொழிகிறாள்.
இதனைக் கேட்ட கண்ணகி கணவன் எதிரே தன்னைப் புகழ்ந்த மூதறிவாட்டியின் மயக்கத்தை நினைத்து "இம் மூதறிவாட்டி தெய்வ வெறி கொண்டு ஏதோ மயங்கிக் கூறினாள்' என்னும் கருத்தில் வெட்கி நகைக்கின்றாள்.
ஆனால் அப்புன்னகை அத் தேவராட்டிக்குப் புலப்பட்டதோ எனின் இல்லை.
ஏன்? கண்ணகி புகழ் நாணிப் புரிந்த புன்னகையை தேவராட்டி கண்டாளல்லள். காரணம் கண்ணகி தன் அரும்பெறற் கணவனது முதுகில் ஒடுங்கிய பின்னரே புன்முறுவல் பூத்ததுதான்.
மூதாட்டியின் புகழ் சொல்லைக் கேட்டவுடன் ஏற்பட்ட உணர்ச்சியினால் தோன்றிய அப் புன்னகையை தேவராட்டியும் தன் கணவனும் கண்டுவிடக்கூடாதே என்பது கண்ணகியின் கருத்து.
இங்கு அவள் மறைய நின்று காண, தூண் போன்று உதவியது கணவன் தோள்களே!(ஸ)
Add new comment