- தற்போதைய பணிப்பாளர் இராணுவத் தலைமையகத்திற்கு
இலங்கை இராணுவத்தின் புதிய ஊடக பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன, ஸ்ரீ ஜயவர்தனபுரயிலுள்ள இராணுவ தலைமையத்தில் இன்று (18) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதுவரை காலம் பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தின் பணிப்பாளர், இராணுவ ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவப் பேச்சாளர் ஆகிய பதவிகளை வகித்து வந்த பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இன்று (18) முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவத் தலைமையகத்திற்கு இடமாற்றம் பெற்று செல்வதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இராணுவத்தின் 19ஆவது ஊடக பணிப்பாளராக பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன, சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து இராணுவத்தின் புதிய ஊடக பணிப்பாளராக முதலாவது ஆவணத்தில் கையொப்பமிட்டு சுபவேளையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னாள் ஊடக பணிப்பாளரும் இராணுவப் பேச்சாளருமான பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க, இராணுவ ஊடக ஆலோசகர் சிசிர விஜேசிங்க, கேர்ணல் மீடியா கேர்ணல் விஜித ஹெட்டியாராச்சி, மேலதிக கேர்ணல் மீடியா கேர்ணல் விஷ்வஜித் வித்யானந்த உட்பட இராணுவ உயர் அதிகாரிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கண்டியை பிறப்பிடமாக் கொண்ட பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன, 1990ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டு தனது அடிப்படை பயிற்சிகளை முடித்துக் கொண்டு 1992ஆம் ஆண்டு இரண்டாவது லெப்டினன்டாக வெளியேறினார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் பாதுகாப்பு துறைசார் கற்கை நெறிகளை முடித்துள்ள இவர், தியத்தலாவை இராணுவ அகடமி, இராணுவத் தலைமையகம் உட்பட இராணுவத்தில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து வந்துள்ளார்.
இலங்கை இராணுவ பீரங்கி படையைச் சேர்ந்த இவர், தாய் நாட்டிற்கு சேவையாற்றியமைக்காக ரண சூர பதக்கம், உத்தம சேவா பதக்கங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- ஸாதிக் ஷிஹான்
Add new comment