- எம்.பிக்கள் கொத்தணியில் நான்காமவர்
இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,
அவருக்கு கொரோனா தொடர்பில் மேற்கொண்ட Rapid Antigen சோதனையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ள அவர், கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பைப் பேணிய அனைவரும் சுகாதாரப் பிரிவின் ஆலோசனையைப் பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதற்கமைய, கொரோனா தொற்றிய பாராளுமன்ற உறுப்பினர்களில் நான்காவது தொற்றாளராக, மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அடையாளம் காணப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து அவரது பணிக் குழாமைச் சேர்ந்த 10 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, கடந்த வியாழக்கிழமை (14) ஜனாதிபதியினால் ஹொரணையில் திறந்து வைக்கப்பட்ட டயர் தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்து கொண்டிருந்தார்.
அத்துடன், நேற்று முன்தினம் இடம்பெற்ற கேகாலை மாவட்ட ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டுள்ளார்.
அத்துடன், கொரோனா நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என தெரிவிக்கப்படும், கேகாலையைச் சேர்ந்த தம்மிக பண்டாரவின் ஆயுர்வேத பாணி, ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கு வழங்கப்பட்டபோது, பியல் நிஷாந்தவும் அதனை அருந்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment