பாராளுமன்றத்தில் 463 PCR பரிசோதனைகள்

பாராளுமன்றத்தில் 463 PCR பரிசோதனைகள்-463 PCR Tests Done in Parliament

- வெள்ளிக்கிழமையும் மீண்டும் PCR சோதனை
- பாராளுமன்ற அலுவல்கள் குழு கூட்டம் ஒத்திவைப்பு

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட்களுக்கு கொரோனா தொற்றை அறியம் PCR பரிசோதனைகள் மேற்கொள்ள இன்று (13) ஆரம்பிக்கப்பட்டதுடன், இன்றைய தினத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட்கள் 463 பேர் பரிசோதனைகளில் பங்குபற்றினர்.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேருக்கும் இதன்போது PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பாராளுமன்ற பணியாளர்களுடன் பாராளுமன்ற பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட 448 பேர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெனாண்டோ குறிப்பிட்டார்.

சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட சுகாதார பணியாட்களினால் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) ஆம் திகதியும் மு.ப. 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை பாராளுமன்ற வளாகத்தில் PCR பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

பாராளுமன்ற அலுவல்கள் குழு கூட்டம் ஒத்திவைப்பு
அத்துடன் இன்று (13) இடம்பெறவிருந்த பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டத்தை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் திங்கட்கிழமை (18) நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 19ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின் பணிகள் தொடர்பில் தீர்மானிப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் இந்தக் கூட்டம் இடம்பெறவிருந்தது.


Add new comment

Or log in with...