- எம்.பியாகும் 4ஆவது தடவை இதுவாகும்
அத்துரலியே ரத்தன தேரர் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக இன்று (05) சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
அவர் சபாநாயகர் முன்னிலையில் பதவிச்சத்தியம் செய்துகொண்ட பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில் கையொப்பமிட்டார்.
கடந்த பொதுத் தேர்தலில் எங்கள் மக்கள் சக்தி கட்சிக்குக் (அபே ஜனபல கட்சி) கிடைத்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அத்துரலியே ரத்தன தேரரின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்திருந்தது.
ஜாதிக ஹெல உருமயவை பிரதிநிதித்துவப்படுத்தி 2004ஆம் ஆண்டு களுத்துறை மாவட்டத்தில் முதல் தடவையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட ரத்தன தேரர், 2010ஆம் ஆண்டு 7ஆவது பாராளுமன்றத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக கம்பஹா மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டார். இவர் 2015ஆம் ஆண்டு 8ஆவது பாராளுமன்றத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இவர் 4ஆவது தடவையாகப் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment