மஹர கலகம்; மேலும் 4 கைதிகளின் உடல்களை தகனிக்க அனுமதி

மஹர கலகம்; மேலும் 4 கைதிகளின் உடல்களை தகனிக்க அனுமதி-Mahara Prison Shooting-Court Ordered to Cremate 4 Bodies of Inmates

மஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த நிலையில் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்ட மேலும் நான்கு கைதிகளின் உடல்களை தகனம் செய்ய, வத்தள நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மஹர சிறையில் கடந்த நவம்பர் 29ஆம் திகதி இடம்பெற்ற கலகத்தின்போது, 11 கைதிகள் மரணமடைந்திருந்தனர்.

அவர்களில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக ஆரம்பகட்ட PCR சோதனையில் கண்டறியப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், அவர்களது உடல்களை தகனம் செய்ய அரசாங்கம் முடிவு செய்திருந்த நிலையில், உடல்களை எரித்து அழிப்பதன் மூலம் மஹர சம்பவம் தொடர்பான விசாரணைகளில் சாட்சியங்கள் அழிக்கப்பட்டு விடும் எனத் தெரிவித்து, சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பினால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

அதற்கமைய, குறித்த சடலங்களின் பிரேதப் பரிசோதனையை விரைவாக நிறைவு செய்ய நியமிக்கப்பட்ட, ஐவரடங்கிய விசேட நிபுணர் குழுவினால் அவர்களில் நான்கு பேரின் அறிக்கை ஏற்கனவே கையளிக்கப்பட்டு, அவர்களது உடல்களை தகனிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இச்சம்பவத்தில் மரணமடைந்த மேலும் நால்வரின் மரண பரிசோதனை அறிக்கை நேற்றைய தினம் (29) வத்தளை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த வழக்கு வத்தளை நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் இன்று (30) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, தற்போது எஞ்சியுள்ள 7 உடல்களில் பிரரேதப் பரிசோதனை நிறைவு செய்யப்பட்ட நான்கு உடல்களில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய, குறித்த 4 உடல்களையும் தகனம் செய்ய நீதவான் அனுமதி வழங்கியிருந்தார்.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட ஏனைய 3 பேரின் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

கைதிகளின் பிரேதப் பரிசோதனை தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவில், சட்ட வைத்திய விசேட நிபுணர்கள் 4 பேர் மற்றும் அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்தின் ஆயுதங்கள் தொடர்பான விசேட நிபுணர் ஒருவரும் உள்ளடங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...