அடை மழை காரணமாக மழை வெள்ளத்தில் மட்டக்களப்பு

மட்டக்களப்பில் பெய்து வருகின்ற அடைமழை காரணமாக கிரான், வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி, வாகரை ஆகிய பகுதிகள் வெள்ளநீரினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகம் முற்றுமுழுதாக துண்டிக்கப்பட்ட நிலையில் கிரானில் தற்காலிகமாக இயங்கிவருகின்றது. இப்பிரதேசத்தில் எவரும் இடம்பெயரவில்லை. வெல்லாவெளி பிரதேச செயலகபிரிவில் 03 குடும்பங்கள் தற்காலிகமாக உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். மேற்குறித்த பிரதேச செயலகங்களில் சில பிரதான பாதைகள் நீரில் மூழ்கி காணப்படுகின்றது.

அடைமழையினால் கடந்த 48 மணித்தியாலத்தில் கிடைக்கப்பெற்ற மழை வீழ்ச்சியாக 331 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது. புதன்கிழமையும் அதிகளவான மழை கிடைக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நீரேந்து பிரதேசங்களை அண்டிய மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினரும் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான க.கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில், பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்வதற்காக 14 பிரதேச செயலாளர்களும் கடமையில் ஈடுபட்டு வருவதாகவும் கருத்து தெரிவித்தார்.

மக்களுக்கு இடர்நிலைமைக்கு உதவுவதற்காக கடற்படையினரும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினருடன் பிரதேச செயலக உத்தியோகத்தற்களும் ஆயத்தமான நிலையில் உள்ளனர்.

மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அவசர உதவிகளுக்கு தங்களின் கிராம சேவை உத்தியோகத்தர் மூலம் தங்களின் தேவைகளை உதவிகளை தெரிவிப்பதன் மூலம் தங்களின் உதவிகளை பெற்றுக்கொள்ளமுடியும் என மட்டக்களப்பு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...