எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறும் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருவதைத் தவிர்க்குமாறு, நுவரா எலியா மாவட்ட கொரோனா தடுப்பு குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன விடுத்துள்ள அறிவித்தலிலேயே, இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றுநோய் காரணமாக சிவனொளிபாதமலை யாத்திரைக்கு, நாடு முழுவதிலுமிருந்து புகையிரதம் மற்றும் வேறு வழிகளில் அதிக யாத்திரிகர்கள் வருவதற்கான வாய்ப்பு காணப்படுவதால், அதிக ஆபத்து காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாக, குறித்த குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏற்பட்டுள்ள கொவிட் தொற்றுநோய் காரணமாக, சிவனொளிபாதமலை யாத்திரையின் முதல் வாரத்தில் பக்தர்கள் அதிகளவில் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதுவரை, அனைத்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும், பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் நுவரெலியா மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், நாடு முழுவதும் பரவி வரும் கொவிட்-19 தொற்று நிலையின் அடிப்படையில் சிவனொளிபாதமலை யாத்திரையின் போது, இந்நிலை கட்டுப்பாட்டை மீறி செல்லும் நிலை ஏற்படும் என்பதால், சிவனொளிபாதமலை பக்தர்களிடம் இக்கோரிக்கையை விடுப்பதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம், எதிர்வரம் டிசம்பரம் 29ஆம் திகதி ஆரம்பிக்கின்றது.
இதேவேளை, இம்முறை இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து சிவனொளிபாத மலை யாத்திரை மேற் கொள்வோர், தாம் வசிக்கின்ற பிரதேச செயலாளரது அனுமதியுடனான வைத்திய சான்றிதழ் சமர்பிக்கப்பட்டால் மாத்திரமே யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவர் என, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனி லொகுபோதாகம தெரிவித்துள்ளார்.
Add new comment