எயிட்சுக்கு எதிராக பொறுப்புடன் செயற்பட வேண்டும்

- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள சர்வதேச எயிட்ஸ் தின செய்தி

எயிட்சுக்கு எதிராக போராடுவதற்கும், தடுப்பதற்கும் நாம் உறுதியாக இருக்க வேண்டியதுடன், அது தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள சர்வதேச எயிட்ஸ் தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று சர்வதேச எயிட்ஸ் தினமாகும். எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

பிரதமர் விடுத்துள்ள சர்வதேச எயிட்ஸ் தின செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கொவிட்-19 தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டு, அது தொடர்பில் மாத்திரம் கவனம் செலுத்திவரும் ஒரு சூழ்நிலையிலும், இன்றைய எயிட்ஸ் தினம் குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

1987ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எயிட்ஸ் தொடர்பான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் ஆகிய இருவருக்கு தோன்றிய யோசனைக்கு அமைய சர்வதேச எயிட்ஸ் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

'எச்.ஐ.வி. தொற்றை முடிவுக்கு கொண்டுவருதல், எதிர்ப்பு திறன் மற்றும் தாக்கத்தை குறைத்தல்' என்பதே 2020ஆம் ஆண்டின் எயிட்ஸ் தினத்தின் கருப்பொருளாகும். உலகளாவிய நிலையான அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு 2030ஆம் ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் எயிட்சை இல்லாதொழிப்பதே நோக்கமாகும். அதற்கமைய 2025ஆம் ஆண்டளவில் இந்நாட்டிலிருந்து எயிட்ஸ் நோயை இல்லாதொழிப்பதை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றோம். அதற்கான தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், தயார்ப்படுத்தல்களின் மூலம் எயிட்சை இல்லாதொழிக்க முடியாததுடன், அதற்கு தேவையான பலம் மனித சமூகத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை நினைவுபடுத்துகின்றேன்.


Add new comment

Or log in with...