மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய அக்கரைப்பற்று

அக்கரைப்பற்று பிரதேசத்தில் 31பேர் கொரோனா தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரிவுகள் நேற்று முன்தினம் முதல் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அக்கரைப்பற்று மத்திய சந்தைப்பகுதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக்காணப்பட்டது.

மேலும் பாடசாலைகள் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டதுடன் அரச திணைக்களங்கள் வங்கிகள் பகுதியளவில் திறக்கப்பட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராயும் விசேட ஆலையடிவேம்பு பிரதேச கொரோனா தடுப்பு செயலணிக்கூட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று(27) நடைபெற்றது.

பிரதேச செயலாளர் வி.பபாகரனின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன், வைத்தியர் திருமதி எஸ்.அகிலன், உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர், கணக்காளர் க.பிரகாஸ்பதி நிருவாக உத்தியோகத்தர் கே.சோபிதா பிரதேச சபை செயலாளர் இ.சுரேஸ்ராம் இராணுவ அதிகாரி மேஜர் தம்மிக்க வீரசிங்க, உப பொலிஸ் பரிசோதகர் ரி.ஜெயசீலன் உள்ளிட்ட அரச திணைக்கள உயர் அதிகாரிகள் ஆலய தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் வர்த்தக சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கொரோனா தொற்றுடையவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் பிரதேசத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் பிரதேச செயலாளர் விளக்கமளித்தார். இதற்காக ஒவ்வொரு நிறுவனங்களும் வழங்க வேண்டிய ஒத்துழைப்புக்கள் தொடர்பிலும் கூறினார்.

இங்கு கருத்து தெரிவித்த பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 143 பேரின் மாதிரியில் உடனடி அன்ரிஜன் பரிசோதனையின் படி 21பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். ஏனையவர்களின் மாதிரி பிசிஆர் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் எத்தனை பேருக்கு தொற்று உறுதி செய்யப்படலாம் என்பது தெரியாது. இதேநேரம் தொற்றுடையவர்களுடன் நெருங்கி பழகிய 200 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளோம்.

இதில் எத்தனை பேர் அடையாளப்படுத்தப்படுவர் என்பதும் தெரியாது.

இந்நிலையில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டும் என கூறினார்.

இந்நிலையில் இங்கு கருத்து தெரிவித்த பொலிசாரும் இராணுவத்தினரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது அத்தியாவசிய தேவைகளின்றி நடமாடுவோர் கைது செய்யப்படுவர் எனவும் விவசாய நடவடிக்கை மற்றும் அத்தியாவசிய தேவைகளின் பிரகாரம் வெளிச் சொல்வோரை அனுமதிக்க முடியும் எனவும் அவர்களுக்கான விசேட பாஸ் ஒன்றினை பிரதேச செயலகம் ஊடாக வழங்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடலில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்த நிலையில் பின்வரும் சில தீர்மானங்கள் பிரதேச செயலாளர் தலைமையில் எடுக்கப்பட்டது.

வாச்சிக்குடா விஷேட நிருபர்


Add new comment

Or log in with...