உடலில் புதிய அறிகுறிகள் தென்படின் உஷாராகவும்

மருத்துவரை உடனே நாடவும்; தயக்கம் காட்ட வேண்டாம்

சுகாதார அமைச்சு பணிப்பாளர் டாக்டர் சுதத் சமரவீர எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வீடுகளில் வசிக்கும் வயதானவர்கள் மற்றும் தொடர்ச்சியாக நோய்களில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உடலில் புதிய அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டுமென சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா வைரஸ் கொத்தணி சூழலில் இடம்பெற்றுள்ள மரணங்கள் தொடர்பில் பார்க்கும்போது அதில் பெரும்பாலானவை வீடுகளிலேயே இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், குறிப்பாக வயதானவர்கள் தொடர் நோய்களுக்கு உட்பட்டவர்கள் புதிய அறிகுறி தென்பட்டால் அவதானமாக செயற்படுவது அவசியமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வைரஸ் தொற்று எச்சரிக்கை பிரதேசங்களிலுள்ள வயதானவர்கள் மற்றும் தொடர் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளவர்கள் தமக்கு காய்ச்சல், இருமல், சளி, தொண்டை நோ அல்லது சுவாசிப்பதற்கு அசௌகரியம் காணப்படுமானால் அதற்காக சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வது முக்கியம். அத்துடன் பலவீனம், உணவின் சுவையை இனம் காணப்பட முடியாத நிலையில், உணவில் அதிருப்தி

போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நோய்கள் நாட்படும் வரை தாமதிக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அதேவேளை கடந்த ஒக்டோபர் 04ஆம் திகதி முதல் நேற்று வரை மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனவைரஸ் கொத்தணிகளில் 86 பேர் வீடுகளிலேயே மரணமடைந்துள்ளர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...