மாவீரர் தின நிகழ்வுகள் குறித்து முரண்பட்ட வழக்குகள் பதிவு

பொலிஸாரை மீளாய்வு செய்ய சிறிகாந்தா கோரிக்கை

மாவீரர் நினைவு தின தடைக்கு எதிராக நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக பொலிஸார் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய நீதிமன்றங்களிலும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகள் தொடர்பிலும் ஏற்கனவே தடை கட்டளை பெறப்பட்ட நீதிமன்றங்களுக்கு முன்னால் உள்ள வழக்குகளிலும் தடை கட்டளைக்கு விண்ணப்பித்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகள் தொடர்பிலும் தங்களது குறித்த விண்ணப்பங்களை மீள பெற்றுக்கொள்வது தொடர்பாக பொலிஸார் சிந்திக்க வேண்டும்.

ஏனெனில் ஒரே நாடு ஒரே சட்டம் என்றதன் அடிப்படையில், நீதிமன்றங்களுக்கு நீதிமன்றங்கள் வித்தியாசமான அணுகுமுறையினை, அரசினை பிரதிநிதித்துவப்படுத்தும் பொலிஸ் தரப்பினர் கையாள முடியாது.

மல்லாகத்தில் ஒரு அணுகுமுறை பருத்தித்துறையில் ஒரு அணுகுமுறை மன்னாரில் இன்னுமொரு அணுகுமுறை என்று இருக்க முடியாது. ஆகவே, இவ்விடயத்தில் முறையாக சிந்தித்து நல்ல முடிவினை பொலிஸார் மற்றும் அரசாங்கம் எடுப்பதற்கு முன்வரவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுமித்தி தங்கராசா


Add new comment

Or log in with...