ஏ.டி.பி டென்னிஸ்: அரையிறுதியில் ரபேல் நடால் அதிர்ச்சித் தோல்வி

ஏ.டி.பி டென்னிஸ் இறுதிச்சுற்று போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் ரபேல் நடால் தோல்வி அடைந்தார்.

உலகின் முதல் 8 வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி டென்னிஸ் இறுதிச்சுற்று லண்டனில் நடைபெற்று வருகிறது.

இதன் அரை இறுதி ஆட்டத்தில் உலகின் 2ஆம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார். ரஷ்யாவைச் சேர்ந்த டேனில் மெட்வதேவ் 3–6, 7–6, (7–4), 6–3 என்ற செட் கணக்கில் நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

மெட்வதேவ் ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் முன்னேறி உள்ளார்.

மற்றொரு அரை இறுதியில் டொமினிக் தீம் (அவுஸ்திரியா) 7–5, 6–7 (10–12), 7–6 (7–5) என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்குப் பின்னர் 5 முறை சாம்பியனும், முதல் நிலை வீரருமான ஜோகோவிச்சை (செர்பியா) தோற்கடித்தார்.

இதன்படி இறுதிப்போட்டியில் டொமினிக் தீம் – மெட்வதேவ் மோதுகிறார்கள். இருவருமே முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளனர். இதனால் முதல் சாம்பியன் பட்டத்தை வெல்ல இருவரும் ஆர்வத்தில் உள்ளனர்.


Add new comment

Or log in with...