தமிழரின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தியமைக்கு அங்கஜன் கண்டனம்

யாழ். நீதிமன்றில் யாழ். OIC தெரிவித்த கருத்து

தமிழ் மக்களின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தும் முகமாக யாழ்.நீதவான் நீதிமன்றில் கருத்து தெரிவித்த யாழ்.தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த வெள்ளிக்கிழமை, யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால், கடந்த காலங்களில் இடம்பெற்ற போர் சூழலில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்களுக்கான நினைவேந்தலை தடைசெய்ய கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

குறித்த வழக்கிற்காக முன்னிலையாகிய யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி, தமிழ் மக்களின் உண்ணும் உணவுகளை கொச்சைப்படுத்தும் முகமாக ‘சோறும், புட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என நீதிமன்றில் கருத்து கூறியிருந்தார்.

கடந்த 30 வருடகால கொடிய யுத்தத்தினால், துயருற்ற எமது மக்கள் அக்காலத்தில் கூட உணவு பஞ்சத்தால் உயிர் நீத்த சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இவரது கருத்தானது, அனைத்து இலங்கை நாட்டில் வாழும் மூவின மக்களையும் ஒரே சட்டத்தால் பரிபாலிக்கும் பொலிஸ்துறையில் உயர் பதவியில் இருப்போர் இன ஐக்கியத்தை குழப்புவதும் மற்றும் தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் கருத்து கூறுவதையும் தவிர்த்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் தமிழ் மக்களை தேர்தலின்போது உசுப்பேத்தி அரசியல் சுயலாபம் தேடுகின்ற அரசியல்வாதிகளுக்கு, இவ்வாறான கருத்துக்கள் எதிர்வரும் காலங்களில் மக்களை ஏமாற்றுவதற்கு பக்க பலமாக அமைந்து விடும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...