கராச்சி கிங்ஸ் அணி சம்பியன்

6 அணிகள் பங்கேற்ற 5-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) கிரிக்கெட் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

6 அணிகள் பங்கேற்ற 5-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இமாத் வாசிம் தலைமையிலான கராச்சி கிங்சும், சோகைல் அக்தர் தலைமையிலான லாகூர் குலாண்டர்சும் கராச்சி நகரில் நேற்று முன்தினம் இரவு மோதின. இதில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய லாகூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 134 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் தமிம் இக்பால் (35 ஓட்டங்கள்), பஹார் ஜமான் (27 ஓட்டங்கள்) ஓரளவு நல்ல தொடக்கம் தந்த போதிலும் மிடில் வரிசை வீரர்களின் மந்தமான துடுப்பாட்டத்தால் சோடைபோனது.

அடுத்து களம் இறங்கிய கராச்சி கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 135 ஓட்டங்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது. வெற்றிக்கு வித்திட்ட பாபர் அசாம் 63 ஓட்டங்களுடன் (49 பந்து, 7 பவுண்டரி) கடைசி வரை களத்தில் இருந்தார். வாகை சூடிய கராச்சி அணிக்கு ரூ.3.5 கோடியும், முதல் முறையாக லீக் சுற்றை தாண்டி 2-வது இடத்தை பிடித்த லாகூர் அணிக்கு ரூ.1.5 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பாபர் அசாம் (12 ஆட்டத்தில் 5 அரைசதத்துடன் 473 ஓட்டங்கள்) தட்டிச் சென்றார்.


Add new comment

Or log in with...