மட்டக்களப்பில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

மட்டக்களப்பு நகரில்  நேற்று (19) ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, ஞானசூரியம் சதுக்கத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

கடந்த 9ஆம் திகதி கொழும்பில் இருந்து வந்து சுயதனிமைப்படுத்தலில் இருந்தவரே இவ்வாறு கொரோனா தொற்றாளராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 83ஆக அதிகரித்துள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 128ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனிநபர் இடைவெளியை பேணுமாறும், குழுக்களாக செயற்படுவதை நிறுத்துமாறும், முகக்கவசங்களை உரையாடல்களின்போது கட்டாயமாக பயன்படுத்துமாறும், பயணங்களின்போதும் முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை பேணுமாறும், தும்மல் மற்றும் இருமலின்போது சரியான வழிமுறைகளை பின்பற்றுமாறும், சுகாதார துறையால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றுமாறும் மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன், கே. விஜயரத்தினம், மட்டக்களப்பு குறூப் நிருபர் - ஜவ்பர்கான்)

 


Add new comment

Or log in with...