மீன் பிடிக்கச் சென்றவர் குளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு

மட்டக்களப்பு, உறுகாமம் புதூர் குளத்தில் வீழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (18) இடம்பெற்றுள்ளது.

உறுகாமம் புதூர் கிராமத்தில் வசிக்கும் 7 பிள்ளைகளின் தந்தையான அப்துல் காதர் அப்துல் ஸலாம் (58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வழமைபோன்று இவர் உறுகாமம் புதூர் குளத்தில் இரவு நேர மீன்பிடிக்காக வீட்டிலிருந்து சென்றுள்ளார். இதன் பின்னர் சிறிது நேரத்தில் இவர் குளத்தில் வீழ்ந்து உயிரிழந்து கிடந்ததை ஏனைய மீனவர்கள் கண்டு சடலத்தை மீட்டெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் கரடியனாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும், பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(மட்டக்களப்பு குறூப் நிருபர்- ஜவ்பர்கான்)
 


Add new comment

Or log in with...