லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் மீண்டும் மாற்றம்

லங்கா ப்ரீமியர் லீக் தொடரின், போட்டி அட்டவணையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்திருக்கின்றது.

சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியதனை அடுத்து, லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் போட்டிகள் அனைத்தினையும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்‌ஷ சர்வதேச மைதானத்தில் இம்மாதம் 27ஆம் திகதி தொடக்கம் நடாத்த கடந்த மாதம் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும், தற்போது புதிய ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபை லங்கா ப்ரீமியர் லீக் தொடர் இம்மாதம் 26ஆம் திகதி தொடக்கம் நடைபெறும் எனக் குறிப்பிட்டிருக்கின்றது.

எதிர்வரும் 26ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் தொடரின் முதல் போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் அணியும், கொழும்பு கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இதேநேரம், தொடரின் குழுநிலைப் போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி வரையில் இடம்பெறவிருக்கின்றன. பின்னர், தொடரின் அரையிறுதிப் போட்டிகள் டிசம்பர் மாதம் 13,14ஆம் திகதிகளிலும், இறுதிப் போட்டி 16ஆம் திகதியும் நடைபெறவிருக்கின்றன.

லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் மொத்தமாக இலங்கையின் முக்கிய நகரங்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஐந்து அணிகள் பங்கேற்கவிருப்பதோடு, இந்த தொடரில் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரர்களும் பங்கெடுக்கவிருக்கின்றனர்.


Add new comment

Or log in with...