லங்கா ப்ரீமியர் லீக் போட்டி அட்டவணையில் மாற்றம்

இலங்கை வைத்திய அதிகாரிகள் லங்கா ப்ரீமியர் லீக் தொடரை நடத்துவதற்கான அனுமதியை வழங்கியுள்ள நிலையில், போட்டி அட்டவணையில் இலங்கை கிரிக்கெட் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் லங்கா ப்ரீமியர் லீக் தொடர் இம்மாதம் 21ம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இம்மாதம் 27ம் திகதி முதல் அடுத்த மாதம் 17ம் திகதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமின்றி பல்லேகலையில் போட்டிகள் நடத்தப்படாது எனவும், அனைத்து போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் நடத்தப்படும் என்ற அறிவுப்பும் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பில் லங்கா ப்ரீமியர் லீக்கின் பணிப்பாளர் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவருமான ரவின் விக்ரமரத்ன கருத்து வெளியிடுகையில், “தொடரை ஹம்பாந்தோட்டையில் மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். தற்போது நாம் எமது உயிரியல் பாதுகாப்பு வளையத்துக்கான திட்டங்களை மேம்படுத்தியுள்ளதுடன், வைத்திய அதிகாரிகளின் அனுமதி கிடைத்தவுடன், அதனை சரியாக பராமரிக்க வேண்டியுள்ளது” என்றார். புதிய போட்டி அட்டவணையின்படி, பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் ப்ளே-ஓஃப் சுற்றில் விளையாடவுள்ள வீரர்களுக்கும், லங்கா ப்ரீமியர் லீக்கில் விளையாடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், லங்கா ப்ரீமியர் லீக்கின் சில அணிகள், வெளிநாட்டு வீரர்களை அணிகளில் இணைக்க முனைந்து வருகின்றன.

இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் 26ம் திகதி தென்னாபிரிக்க அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இந்த நிலையில், தொடருக்கு வெறும் 9 நாட்கள் மாத்திரம் இருக்கும் நிலையில், அடுத்த மாதம் 18ம் திகதி இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...