இலங்கையின் 18ஆவது விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண இன்று (03) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கொழும்பு விமானப் படைத் தலைமையகத்திலுள்ள தனது அலுவலகத்திற்கு வருகை தந்த அவர், சுபவேளையில் முதல் ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்ளும் பொருட்டு விமானப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரணவுக்கு விஷேட மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது.
இலங்கையின் 17ஆவது விமானப் படைத் தளபதியாக இதுவரை காலம் சேவையாற்றிய எயார் சீப் மார்ஷல் சுமங்கள டயஸ் ஓய்வு பெற்றுச் செல்வதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே விமானப் படையின் பிரதம அதிகாரியாக செயற்பட்டு வந்த எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண 18ஆவது விமானப்படைத் தளபதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார். நேற்று 02ஆம் திகதி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை, ஓய்வு பெற்றுச் செல்லும் முன்னாள் விமானப் படைத் தளபதி சுமங்கள டயஸ் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் எயார் சீப் மார்ஷலாக ஜனாதிபதியினால் தரமுயர்த்தப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் காலை விமானப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த அவருக்கு பிரியாவிடை அணிவகுப்பு வழங்கப்பட்டது. இதன் போது அவர் தனது பொறுப்பிலிருந்த விமானப் படைத் தளபதி பதவிக்கு சொந்தமான சம்பிரதாய கோலை புதிய விமானப் படைத் தளபதியிடம் கையளித்தார்.
புதிய விமானப் படைத் தளபதியின் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் அவரது குடும்ப உறுப்பினர்கள் உட்பட விமானப் படைத் தலைமையகத்திலுள்ள உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
ஸாதிக் ஷிஹான்
Add new comment