மின்னல் தாக்கியதில் கணவன், மனைவி பலி

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய இடி மின்னலில் சிக்கி  திருக்கோவில்,  விநாயகபுரத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (30) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றது.

விநாயகபுரம் தபாலக வீதியைச் சேர்ந்த லோகநாயகம் யோகேஸ்வரன் (46) மற்றும் அவரது மனைவியான காசிப்பிள்ளை ஜெயசுதா (46) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். விவசாயிகளான இவர்கள், 3 பிள்ளைகளின் பெற்றோர் ஆவர்.

குறித்த தம்பதியினர் சாகாமம், கப்பித்தலாவ பகுதியிலுள்ள தமது காணியில் நிலக்கடலை செய்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, பாரிய இடி மின்னல் ஏற்பட்டது. அதற்குப் பயந்து அவர்கள் ஓடிவருகையில் மின்னல் தாக்கி ஸ்தலத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது

திருக்கோவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றிரவு மாலை 6.00 மணி முதல் மாவட்டமெங்கும் பாரிய இடி மின்னலுடன் கனமழை பொழிந்தமை குறிப்பிடத்தக்கது.

(காரைதீவு குறூப் நிருபர் - சகா)


Add new comment

Or log in with...