ஈச்சிலம்பற்றில் 5 தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி மீட்பு

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பகுதியில் பொலிஸாரினால் சிறிய கைத்துப்பாக்கியொன்று ஐந்து தோட்டாக்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக, கந்தளாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ. விஜயசிறி தெரிவித்தார்.

இத்துப்பாக்கி நேற்று (29) மாலை மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கந்தளாய் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இக்கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.  ஈச்சிலம்பற்று பிரதான வீதியிலிருந்து நூறு மீற்றர் தூரத்தில் இக்கைத்துப்பாக்கி காணப்பட்டதாகவும், அத்துப்பாக்கியினுள் ஐந்து தோட்டாக்கள் காணப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

இது, சீனா நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இத்துப்பாக்கி புதிதாக உள்ளதாகவும்   ஏதாவது குற்றச்செயல்களை மேற்கொண்டு விட்டு வீசியிருக்கலாம் எனவும், பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அத்துப்பாக்கி தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(கந்தளாய் தினகரன் நிருபர் - எப்.முபாரக்)   


Add new comment

Or log in with...