காரைநகரில் 82 கி.கி. கஞ்சாவுடன் படகு மீட்பு

யாழ். காரைநகரில் கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட 82 கிலோகிராம் கேரள கஞ்சாவையும் படகு ஒன்றினையும் மீட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

நேற்று (29) இரவு காரைநகரில் உள்ள கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில், சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகு ஒன்றை துரத்திச் சென்றபோது, படகில் சென்றவர்கள் வேகமாக படகை செலுத்திச் சென்று காரைநகர் கசூரினா கடற்கரையில் படகை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அப்படகில் கடற்படையினர் சோதனையிட்டபோது, 82 கிலோகிராம் கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

படகும், மீட்கப்பட்ட கஞ்சாவும் காரைநகர் கடற்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

(நாகர்கோவில் விசேட நிருபர் - ஜெகதீஸ் சிவம்) 


Add new comment

Or log in with...